தனியார் வைத்தியசாலைகள் தொடர்பில் ஆய்வு

கொரோனா பரிசோதனைகளை முன்னெடுக்கும் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பில் ஆராயுமாறு ஆலோசனை

by Bella Dalima 04-09-2021 | 11:32 AM
Colombo (News 1st) சுகாதார அமைச்சின் அனுமதியின்றி PCR மற்றும் Antigen பரிசோதனைகளை முன்னெடுக்கும் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பில் ஆராயுமாறு பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாது கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் அவ்வாறான தனியார் வைத்தியசாலைகளை பதிவு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரிசோதனைகளின் பின்னர் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் தொடர்பிலான தகவல்களை பிராந்தியத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிராந்திய விசேட தொற்றுநோய் நிபுணருக்கு அறிவிக்குமாறும் சுகாதார அமைச்சு குறித்த தனியார் வைத்தியசாலைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்பவர்கள், தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மருத்துவ ஆலோசனையின்றி செயற்படுவதால், மரணத்தை எதிர்கொள்ளும் நிலை காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனால் வீடுகளில் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, PCR மற்றும் Antigen பரிசோதனைகளுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை இதற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிணங்க PCR பரிசோதனைகளுக்கு 6,500 ரூபாவும் Rapid Antigen பரிசோதனைக்கு 2000 ரூபாவும் அறவிட முடியும். இந்த கட்டணங்களை மேலும் குறைப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, Pulse oximeter-க்கு அதிகபட்ச சில்லறை விலையாக 3000 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.