சயத் அலி கிலானி காலமானார்

காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர் சயத் அலி கிலானி காலமானார்

by Bella Dalima 02-09-2021 | 12:59 PM
Colombo (News 1st) காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர் சயத் அலி கிலானி (Syed Ali Geelani) தமது 92 ஆவது வயதில் காலமானார். நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் ஸ்ரீநகரிலுள்ள தமது இல்லத்தில் உயிரிழந்தார். இந்திய ஆளுகைக்கெதிரான பிரசாரங்களை முன்னெடுத்த சிரேஷ்ட தலைவரான சயத் அலி கிலானி கடந்த 11 ஆண்டுகளின் பெரும்பகுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரது மறைவையடுத்து, காஷ்மீரின் பிரதான நகராகிய ஸ்ரீநகரில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கிலானியின் வீட்டிற்கு அருகாகவுள்ள வீதிகளில் முட்கம்பி தடைகளும் வீதித்தடைகளும் போடப்பட்டுள்ளன. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படக்கூடும் எனவும் இணைய சேவைகள் துண்டிக்கப்படக்கூடும் எனவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் பதற்றம் நிலவிவரும் இந்த காலகட்டத்தில் இவ்வாறான கெடுபிடிகள் புதிதானவையல்லவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.