by Staff Writer 01-09-2021 | 3:25 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் பிரியந்த லியனகேவினால் இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு இன்று (01) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி, கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிக்கு நிதியுதவி வழங்கியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் ரிஷாட் பதியுதீன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் சார்பில் விசேட அறிக்கையை சமர்ப்பிக்க எண்ணியுள்ளதால், வழக்கை சில நாட்களில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மனுவொன்றினூடாக அவர் தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வழக்கின் ஏனைய சந்தேகநபர்களான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட 06 பேரும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதுடன் ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக நீதவான் இன்றைய வழக்கை விசாரித்தார்.