யாழில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு

by Staff Writer 30-08-2021 | 9:40 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடொன்று பயனாளியிடம் இன்று (30) கையளிக்கப்பட்டது. தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு புத்தசாசன அமைச்சினால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக யாழ். மாவட்டத்தில் நான்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இராணுவத்தினரால் வீடுகளுக்கான கட்டுமான வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த தேசிய வெசாக் தினத்தன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா நிலை காரணமாக இன்றைய தினம் உடுவில் பகுதியில் நான்கு அங்கத்தவர்களை கொண்ட வறிய குடும்பத்திற்காக அமைக்கப்பட்ட வீடு யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியினால் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. இந்த வீட்டை கையளிக்கும் நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, பலாலி இராணுவ கட்டளைத் தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.