பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

க.பொ.த உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க 2 வாரங்கள் கால அவகாசம்

by Staff Writer 27-08-2021 | 12:39 PM
Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர உயர் தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். இதேவேளை, ஏற்கனவே திட்டமிட்டவாறு உயர் தரம் மற்றும் 5 ஆம் தர புலமைப்பரில் பரீட்சையினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்கான தினங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின், எதிர்வரும் சில வாரங்களுக்குள் அதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் கூறினார். அதற்கமைய, திட்டமிட்டுள்ள வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையை நவம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.