தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையை வந்தடைந்தது

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையை வந்தடைந்தது

by Bella Dalima 26-08-2021 | 2:20 PM
Colombo (News 1st) சர்வதேச ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடவுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இன்று (26) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்கும் பயிற்றுனர் குழாமுக்கும் COVID பரிசோதனை நடத்தப்பட்டது. வீரர்கள் பயிற்றுனர் குழாம் உள்ளிட்ட 40 பேர் வருகை தந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார். தலா மூன்று சர்வதேச ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடர் Bio-secure bubble எனப்படும் உயிர் குமிழ் சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு அமைய நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. தொடரின் அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், முதலாவது ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 2 ஆம் திகதி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. முதலாவது இருபதுக்கு இருபது போட்டி அடுத்த மாதம் 10 ஆம் திகதியும் கடைசிப் போட்டி 14 ஆம் திகதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியை தசுன் ஷானக்கவும் தென்னாபிரிக்க அணியை டெம்பா பவுமாவும் இந்தத் தொடரில் வழிநடத்தவுள்ளனர்.