குருநகரில் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞருக்கு மீண்டும் PCR பரிசோதனை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

by Bella Dalima 25-08-2021 | 8:14 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பின்னர் COVID தொற்று உறுதி செய்யப்பட்ட இளைஞருக்கு மீண்டும் PCR பரிசோதனை நடத்துமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாள்வெட்டில் உயிரிழந்த 24 வயதான இளைஞருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கமைய மீண்டும் PCR பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.ஶ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். உயிரிழந்த இளைஞரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உயிரிழந்த இளைஞருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரின் குடும்பத்தையும் அவர் இறுதியாக சந்தித்தவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குருநகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கினர். அங்கிருந்த ஒருவர் மீது கற்கள் வீசப்பட்டதுடன், வாள்வெட்டும் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வரில் ஒருவரே நேற்று உயிரிழந்ததுடன், ஏனைய மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.