ஏப்ரல் 21 தாக்குதல்: பொலிஸ்மா அதிபர் விசேட உரை

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விசேட உரை

by Bella Dalima 25-08-2021 | 6:46 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் குறித்து போதிய தௌிவின்மையால், சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவுவதாக பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன குறிப்பிட்டார். இதனால் சில தரப்பினர் இந்த விசாரணைகள் தொடர்பில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறினார். பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் நடத்தப்படுவதால், அது தொடர்பிலான தகவல்களை வௌிப்படையாக தெரிவிப்பதன் மூலம் வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், விசாரணைகள் தொடர்பில் முழுமையான விபரங்களை கூற முடியவில்லை எனவும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்தார். சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் நடத்திய தொடர் குண்டுத்தாக்குதல் குறுகிய காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்லவெனவும் அது நீண்டநாள் திட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டதை தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற தொடர் சம்பவங்கள் உறதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். தாக்குதல் தொடர்பில் அவர் நிகழ்த்திய விசேட உரையிலேயே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.