ஆப்கானிஸ்தானுக்கான நிதியுதவிகள் இடைநிறுத்தம்

உலக வங்கியின் ஆப்கானிஸ்தானுக்கான நிதியுதவிகள் இடைநிறுத்தம்

by Bella Dalima 25-08-2021 | 1:09 PM
Colombo (News 1st) தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கான நிதியுதவிகளை உலக வங்கி இடைநிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கான நிதியுதவிகளை உலக வங்கி இடைநிறுத்தியுள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியமை, ஆப்கானிஸ்தானுடைய அபிவிருத்தி வாய்ப்புகளில் குறிப்பாக பெண்களுக்கானவற்றில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பில் கவலை கொண்டுள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கான நிதி வழங்கல்களை சர்வதேச நாணய நிதியம் இடைநிறுத்திய சில தினங்களில், உலக வங்கியினால் இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் அமெரிக்காவிலுள்ள சொத்துக்களை பைடன் நிர்வாகம் முடக்கியுள்ளது. இதனிடையே, நாட்டை விட்டு வௌியேறும் நோக்கில் காபூல் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எவ்வாறாயினும், கடந்த 10 நாட்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வௌியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.