கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய குழு நியமனம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதானவர்களை விடுவிப்பது தொடர்பில் ஆராய குழு நியமனம்

by Bella Dalima 25-08-2021 | 5:26 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்வது அல்லது பிணை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக ஆலோசகர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் 13 ஆம் சரத்திற்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஆலோசகர் குழு நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் சட்டப்பிரிவு பணிப்பாளர் நாயகம், உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிஸ் குப்த ரோஹனதீர குறிப்பிட்டார். முன்னாள் பிரதம நீதியரசர் அஷோக டி சில்வாவின் தலைமையிலான இந்த குழுவில், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி A.A.R.ஹெய்யன்துடுவ மற்றும் ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவிக்கும் அல்லது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களுக்கு பிணை வழங்குதல் அல்லது அவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட தீர்மானங்களை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வதை இந்த ஆலோசகர் குழுவிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டகாலமாக ஆலோசகர் குழுவொன்று நியமிக்கப்படாமையால், தங்களின் உரிமைகள் தொடர்பான விடயங்களை முன்வைப்பதற்கு கைதிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை. கைதிகள் தாம் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை புதிய ஆலோசகர் குழுவிடம் எடுத்துரைக்க முடியும் என ஹரிஸ் குப்த ரோஹனதீர சுட்டிக்காட்டினார்.