பஸ் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம்

வருமானத்தை இழந்துள்ள பஸ் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம்

by Staff Writer 24-08-2021 | 10:54 AM
Colombo (News 1st) வருமானத்தை இழந்துள்ள பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். வாகன உதிரிப்பாகங்கள், பேட்டரிகள், டயர்கள், எண்ணெய் வகைகள் மற்றும் காப்புறுதி, லீசிங் கட்டணங்களுக்கான ஒரு தொகை பணத்திற்குரிய வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார். இதனை தவிர, வருமானம் இழந்துள்ள பஸ் ஊழியர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்குரிய பணத்திற்கான வவுச்சர்களும் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நிவாரண செயற்றிட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்காக தனியார் பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.