ஆப்கானிஸ்தான் சென்ற உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதா?

ஆப்கானிஸ்தான் சென்ற உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதா: உண்மை என்ன? 

by Bella Dalima 24-08-2021 | 6:17 PM

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் உள்ள உக்ரைன் பிரஜைகளை மீட்பதற்காக காபூல் சென்றிருந்த விமானம் கடத்தப்பட்டதாக இன்று சில ஊடகங்களில் வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது

விமானத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) ஈரானுக்கு கடத்திச் சென்று விட்டதாக உக்ரைனின் வெளிவிவகார துணை அமைச்சர் Yevhenii Yenin தெரிவித்திருந்தார்.

எனினும், விமானம் கடத்தப்பட்டமை தொடர்பான வெளிவிவகார துணை அமைச்சரின் குற்றச்சாட்டை உக்ரைனும் ஈரானும் நிராகரித்துள்ளன.

ஈரானிய சிவில் விமான போக்குவரத்து ஆணையமும் இந்த விடயத்தை மறுத்துள்ளதுடன், அந்த விமானம் Mashhad-இல் எரிபொருள் நிரப்பிக்கொண்டு பின்னர் Kiev-விற்கு பறந்ததாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் வௌிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ஒருவரும் விமானக் கடத்தலை மறுத்துள்ளார்.

இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஒலே நிகோலேன்கோவை மேற்கோள்காட்டி உக்ரைன் செய்தி முகமையான இன்டர்ஃபேக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "காபூலிலோ வேறு எங்கோ எங்கள் நாட்டு விமானம் கடத்தப்படவில்லை. இது தொடர்பாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை," என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள உக்ரைன் பிரஜைகளை மீட்க அனுப்பிய மூன்று விமானங்கள் மூலம் இதுவரை 256 பேர் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.