கொலை அச்சுறுத்தல் விடுத்தவருக்கு பிணை

யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தவருக்கு பிணை

by Staff Writer 23-08-2021 | 6:41 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரை தொலைபேசியில் அச்சுறுத்திய நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சந்தேகநபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பை சேர்ந்த ஒருவரே யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொலைபேசியூடாக உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரால் கடந்த வாரம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரால், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினூடாக பிடியாணை உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த 20 ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.