புறந்தள்ள முடியாத தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 23-08-2021 | 8:39 PM
Colombo (News 1st) நாட்டில் எத்தகைய சவால்கள், தடைகள் வந்தாலும் புறந்தள்ள முடியாத தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ​தெரிவித்தார். கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த பெரஹரா வெற்றிகரமாக நடத்தப்பட்டதை குறிக்கும் வகையில், கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா பாரம்பரிய முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டதாக குறிக்கும் ஆவணத்தை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல இன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார். இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் எத்தகைய சவால்கள், தடைகள் எழுந்தாலும் புறந்தள்ள முடியாத தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளதாக சுட்டிக்காட்டினார். இதில் முதலிடம் புனித தந்த தாதுவிற்காக நடத்தப்படுகின்ற வழிபாடுகளுக்கு உரியது என்பதை வரலாறு தொட்டு ஆட்சியாளர்கள் நம்பி வந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். தொடர்ந்து பெரஹராவை அலங்கரித்த யானைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், பந்தா என்ற யானைக்கு ஜனாதிபதி பழங்களை வழங்கினார்.