மதில் சரிந்து வீழ்ந்ததில் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர் 

by Staff Writer 22-08-2021 | 9:14 PM
Colombo (News 1st) கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை - குருக்கலை பகுதியில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து வீழ்ந்து ஒன்றரை வயதான பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. அயலவர் ஒருவர், குடியிருப்பின் முதலாம் மாடியில் குறித்த குழந்தையை தூக்கிவைத்திருந்த போது குழந்தையின் தொப்பி கீழே வீழ்ந்துள்ளது. தொப்பியை எடுக்க முயன்ற சந்தர்ப்பத்தில், அவர்கள் நின்றுகொண்டிருந்த பகுதியில் இருந்த சீமெந்து கற்களால் அமைக்கப்பட்ட மதில் சரிந்ததில் இருவரும் கீழே வீழ்ந்துள்ளனர். இதனையடுத்து, குழந்தையும் குழந்தையை தூக்கிவைத்திருந்த 32 வயதான நபரும் பேராதனை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எவ்வாறாயினும், சிகிச்சை பலனின்றி இன்று (22) அதிகாலை 2.30 மணியளவில் குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.