புதிய வழிகாட்டல் கோவை வௌியீடு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு ; புதிய வழிகாட்டல் கோவை வௌியீடு

by Staff Writer 21-08-2021 | 5:57 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் காணப்படும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில், ⭕ வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு உரிய தேவைக்காக ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் மாத்திரமே வௌியே வர முடியும் ⭕ 65 வயதுக்கு மேற்பட்ட நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்கள் உள்ளிட்ட அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள், மருத்துவ தேவைகளுக்காக அன்றி வீடுகளை விட்டு வௌியே வர முடியாது ⭕ எந்தவொரு காரணத்திற்காகவும் எவரும் தனிப்பட்ட தேவைகளுக்காக ஒன்றுகூட முடியாது ⭕ நிர்மாணத்துறை உட்பட நாள் சம்பளத்தின் அடிப்படையில் தொழில் புரிவோர், சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக கடைப்பிடித்து பணிகளில் ஈடுபட அனுமதி ⭕ நடமாடும் விநியோக சேவை, நோயாளர்களை கொண்டு செல்லுதல், அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக மாத்திரமே போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் ⭕ வரையறுக்கப்பட்ட நிதி கொடுக்கல் வாங்கல்களுக்காக மாத்திரம் வங்கி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை இந்த காலப்பகுதியில் Online மூல நிதிப் பரிமாற்றத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது ⭕ சில்லறை மற்றும் சிறப்பு அங்காடிகளில் Online ஊடாக பொருள் கொள்வனவு முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுடன் நுகர்வோருக்கு அவற்றை வாகனங்களில் கொண்டுசென்று விநியோகிக்க அனுமதி ⭕ பேக்கரி உற்பத்திகளை வாகனங்களில் கொண்டுசென்று விநியோகிக்க மாத்திரம் அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், விற்பனை நிலையங்களை திறக்க முடியாது ⭕ நீர், மின், எரிபொருள் மற்றும் எரிவாயு நிரப்பு நிலையங்கள், வாகனங்கள் பழுதுபார்க்கும் மற்றும் டயர் மாற்றும் நிலையங்கள் என்பனவற்றில் தேவையான அளவு ஊழியர்களை மாத்திரம் ஈடுபடுத்தி அவசர சந்தர்ப்பங்களில் சேவையை முன்னெடுக்க அனுமதி ⭕ கொரோனாவால் அன்றி வேறு காரணங்களால் நிகழ்ந்த மரணங்களுக்கான இறுதிக் கிரியைகள், குடும்ப உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் மாத்திரம் 24 மணித்தியாலங்களுக்குள் முன்னெடுக்கப்பட வேண்டும் ⭕ வைத்தியசாலைகளில் வழமையான கிளினிக் நடவடிக்கைகள் இடம்பெறாதெனவும் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கான மருந்துகள் வீடுகளுக்கே விநியோகிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது ⭕ தனியார் மற்றும் அரச மருந்தகங்களை திறக்க அனுமதி ⭕ கிராம சேவையாளர்கள் மற்றும் அனைத்து துறைசார் அதிகாரிகளும் தமது சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அனுமதி ⭕ அத்தியாவசிய ஊழியர்களுடன் மாகாண செயலகங்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் செயற்பாடுகளை பராமரித்தல் ⭕ அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் சம்பள தயாரிப்புடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிறுவன தலைவரின் கடிதத்துடன் வரவழைக்கப்படலாம் போன்ற விடயங்கள் குறித்த அறிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளன.