கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலுமொரு தாதியும் வைத்தியரும் உயிரிழப்பு

by Staff Writer 20-08-2021 | 8:14 PM
Colombo (News 1st) சுகாதாரத் துறை ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த தாதி ஒருவர் இன்று (20) காலை உயிரிழந்தார். இன்று காலை உயிரிழந்த அசோகா மல்காந்தி எனும் தாதி ரந்தவான வைத்தியசாலையில் கடமை புரிந்தவராவார். மூன்று பிள்ளைகளின் தாயான அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். ரந்தவான - விழிம்புல பகுதியைச் சேர்ந்த அவருக்கு 48 வயது. இதேவேளை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக நேற்று பதிவானது. ராஸிக் மொஹமட் ஜனன் எனும் அந்த வைத்தியர் குறித்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். 5 வருடங்களுக்கு மேல் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த 41 வயதான அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். கடினமான சந்தர்ப்பங்களில் தமது உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் நோயாளர்களை குணப்படுத்துவதற்காக வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் ஆற்றும் அளப்பரிய சேவை என்றென்றும் பாராட்டுக்குரியது.