by Staff Writer 19-08-2021 | 8:15 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொட்டகலை மற்றும் ரொசிட்டா கடை வீதிகளை முழுமையாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை வர்த்தக சங்கத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இன்று (19) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இப்பகுதியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரை அண்மித்து அமைந்துள்ள கிராம, தோட்ட மக்களையும் நகருக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கொட்டகலை வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களை நாளை (20) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல நகரின் வர்த்தக நிலையங்களை இன்று (19) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை மூடுவதற்கு ருவன்வெல்ல வியாபார சங்கம் தீர்மானித்துள்ளது.
ருவன்வெல்ல வியாபார சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் அங்குருவெல்ல நகரில் அமைந்துள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் ஒரு வாரத்திற்கு மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அங்குருவெல்ல நகர வியாபார சங்கம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் இன்று (19) முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக சங்கங்களின் ஒன்றியம் இதற்கான முடிவை எட்டியுள்ளது.
இதனிடையே, புத்தளம் நகர மற்றும் பிரதேச சபைகளுக்குட்பட்ட வாராந்த சந்தைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் நகர சபையினால் நிர்வகிக்கப்பட்டுவரும் புத்தளம் வாராந்த சந்தையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 03 வாரங்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக புத்தளம் நகர சபை தலைவர் எம்.எஸ்.எம். ரபீக் தெரிவித்தார்.
இதேவேளை, புத்தளம் பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படும் மதுரங்குளி வாராந்த சந்தையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக புத்தளம் பிரதேச சபைத் தலைவர் ஆர்.பீ. அஞ்சன சந்தருவன் தெரிவித்தார்.