வௌிநாடுகளிலிருந்து வருவோருக்கான புதிய விதிமுறைகள்

வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருவோருக்கான புதிய விதிமுறைகள் வௌியீடு

by Staff Writer 19-08-2021 | 11:14 AM
Colombo (News 1st) வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்களுக்காக அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகள் திருத்தப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (19) முதல் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படுகின்றன. புதிய விதிமுறைகளுக்கு அமைய, வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் அனைவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதன் முடிவுகள் கிடைக்கும் வரை அவர்களை தனிமைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனின், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை என புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்கள், PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாத போதிலும் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிடப்பட்டுள்ளது.