ஒரு சில நாட்களுக்கேனும் நாட்டை முடக்கவும் - சஜித்

குறைந்தது ஒரு சில நாட்களுக்கேனும் நாட்டை முடக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

by Staff Writer 19-08-2021 | 6:15 PM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, குறைந்தது ஒரு சில நாட்களுக்காவது நாட்டை மூடுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி பல தடவைகள் சுட்டிக்காட்டியதாகவும் நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் மீண்டும் அதனை நினைவூட்டுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி முன்வைக்கும் அனைத்து யோசனைகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமையால் இறுதியில் அப்பாவி மக்களுக்கு கண்ணீர் வடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சியின் சம்பிரதாய வியூகத்திலிருந்து விடுபட்டு மக்கள் நலன் சார்ந்த கொள்கையில், குறிப்பாக வைரைஸ தோற்கடிப்பதற்கு விமர்சனங்களுக்கு பதிலாக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும், அரசாங்கம் தம்மால் மாத்திரம் முடியும் என்ற மமதையில் செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த மனோநிலையில் எவ்வித மாற்றத்தை இன்றும் கூட காண முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.