அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்

by Staff Writer 19-08-2021 | 9:14 PM
Colombo (News 1st) சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை இன்று (19) முற்பகல் சந்தித்து ஆசி பெற்றனர். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக தமக்கு எதிராக இடம்பெறும் விசாரணைகள் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் இந்த தருணத்தில் தேரரிடம் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனுடன் நிர்வாக செயற்பாடுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க, நுவரெலியா மாவட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சந்தன அத்துகோரல, மொனராகலை பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார ஹேரத் மற்றும் முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் குமாரசேகர உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் தேரரிடம் ஆசி பெற சென்றிருந்தனர்.