by Staff Writer 17-08-2021 | 12:06 PM
Colombo (News 1st) யால வலயத்தின் மூன்றாம் பிரிவில் யானை ஒன்று கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யானையை சுட்டுக்கொல்வதற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியின் உரிமையாளரே கைது செய்யப்பட்டுள்ளாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
வனஜீவராசிகள் திணைக்களத்தினூடாக விசாரணை ஒன்றும், பொலிஸாரால் தனி விசாரணையும், ஒன்றிணைந்த விசாரணையுமாக மூன்று கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வனஜீவராசிகள் உதவி பணிப்பாளரின் தலைமையில் இந்த குற்றச்செயல் தொடர்பில் விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யானை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, யானையின் உடலை புதைப்பது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என வன ஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.