ஜோக்கிம் பெர்னாண்டோ காலமானார்

சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் ஜோக்கிம் பெர்னாண்டோ காலமானார்

by Staff Writer 17-08-2021 | 6:52 PM
Colombo (News 1st) சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளரும் நாடகக் கலைஞருமான ஜோக்கிம் பெர்னாண்டோ தனது 81 ஆவது வயதில் இன்று காலமானார். கொழும்பு - 13, ஜம்பட்டா வீதியிலுள்ள அவரது வீட்டில் இன்று பகல் அவர் காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார், கொட்டாஞ்சேனை, சென்.பெனடிக்ட் கல்லூரியின் பழைய மாணவராவார். இலங்கை வங்கியின் உத்தியோகத்தராக கடமையாற்றிய அன்னார், ஊடகத்துறையில் இருந்த அதீத ஈடுபாடு காரணமாக, வங்கித் தொழிலை கைவிட்டார். இலங்கை வானொலி சேவையில் பகுதி நேர அறிவிப்பாளராக அறிமுகமாகிய அவர், பின்னர் முழு நேர அறிவிப்பாராக செயற்பட்டார். செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர், நாடகக் கலைஞர், ஊடகவியலாளர் என ஊடகத்துறையில் பல பிரிவுகளிலும் ஜோக்கிம் பெர்னாண்டோ கடமையாற்றியுள்ளார். சக்தி FM இல் ஒலிபரப்பாகிய வந்தியத்தேவன் நாடகத்தில் சுந்தர சோழராக அவர் நடித்திருந்தார். அது மாத்திரமின்றி நிலாச்சோறு நிகழ்ச்சியிலும் கலந்து சிறப்பித்துள்ளார். ஊடகத்துறையில் நீண்டகால அனுபவத்தை கொண்ட சிரேஷ்ட அறிவிப்பாளர் ஜோக்கிம் பெர்னாண்டோவின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.