இன்று 2,428 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 2,428 பேருக்கு கொரோனா தொற்று; ஒக்சிஜன் தேவை அதிகரிப்பு

by Staff Writer 16-08-2021 | 7:57 PM
Colombo (News 1st) இன்று (16) இதுவரை 2,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 34 வீதத்தால் அதிகரித்துள்ளதாக, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
தற்போது டெல்டா தொற்று மிகவும் விரைவாக பரவுகிறது. சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, கடந்த வாரம் 24,000 நோயாளர்களும் 918 மரணங்களும் பதிவாகியுள்ளன. சுகாதார அமைச்சிடமிருந்து இவ்வாறான தகவல் வௌியாகும் போது, எங்களின் சமூகத்தில் இதனை விட மூன்று மடங்கு நோயாளர்கள் இருப்பார்கள் என எமக்கு தெரியும். கடந்த வருடம் 24,000 நோயாளர்கள் பதிவாகியமையானது, அதற்கு முன்பான ஒரு வாரத்துடன் ஒப்பிடுகையில் 34 வீத அதிகரிப்பையும், 918 மரணங்களானது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 60 வீத அதிகரிப்பாகவும் பதிவாகியுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், அடுத்த வாரமளவில் எவ்வாறான நிலைமை ஏற்படக்கூடும் என்பதை எங்களால் ஊகிக்க முடியும்.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று சுமார் 600 நோயாளர்கள் சிகிச்சை பெறுவதாகவும், அவர்களில் 305 பேருக்கு ஒக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பொது மருத்துவ விசேட நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சதிஷ்சந்திர தெரிவித்தார். சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் 20 அல்லது 30 வீதமான நோயாளர்களுக்கே ஒக்சிஜன் தேவை காணப்பட்ட போதிலும், தற்போது 50 வீதமானவர்களுக்கு அதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக ஹர்ஷ சதிஷ்சந்திர சுட்டிக்காட்டினார்.