by Bella Dalima 15-08-2021 | 4:53 PM
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டியலினத்தவர் பற்றியும் சினிமாவில் பணியாற்றும் பட்டியலினத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துக்களை பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பொலிஸாருக்கு சவால் விடும் படி வீடியோ ஒன்றை வௌியிட்டிருந்தார்.
இதையடுத்து, கேரளாவில் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் நேற்று கைது செய்யப்பட்டார்.
இன்று சென்னை அழைத்துவரப்பட்ட அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போது, 27 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.