2 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட 23 பேர் மரணம்

கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டோரில் இதுவரை 23 பேர் மரணம் 

by Staff Writer 15-08-2021 | 11:40 AM
Colombo (News 1st) இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டு இரண்டு வாரங்களுக்கு பின்னர் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்தார். நீண்ட நாட்களாக அவர்களுக்கிருந்த நோய்களே இந்த மரணங்களுக்கான காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு இரண்டு வாரங்களின் பின்னரே தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு செயற்றிறன் அதிகரிப்பதாகவும் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துடாவ சுட்டிக்காட்டினார். அல்ஃபா கொரோனா பிறழ்வு தொற்றுக்குள்ளானவர்களை விட, டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளானவர்களினூடாக வைரஸ் தொற்று பரவும் வீதம் அதிகம் என அவர் குறிப்பிட்டார். ஒருவருக்கு டெல்டா தொற்று ஏற்படுமாயின், இரண்டு நாட்களுக்குள் அவருக்குள் அதிகளவான வைரஸ்கள் உருவாவதுடன், தும்மல் அல்லது வேறு வழிகளினூடாக அதிகளவான வைரஸ்கள் காற்றில் கலக்கக்கூடும் என ரஞ்சித் பட்டுவந்துடாவ மேலும் தெரிவித்தார். இதேவேளை, COVID தொற்றுக்குள்ளான 21 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 700 கர்ப்பிணிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். நாட்டில் இதுவரை 2,800 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.