இந்திய உயர்ஸ்தானிகராலயம் தாக்குதலுக்கு இலக்காகும் என தகவல் வழங்கியவர் கைது

by Bella Dalima 15-08-2021 | 11:51 AM
Colombo (News 1st) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தாக்குதலுக்கு இலக்காகும் அபாயம் உள்ளதாக தகவல் வழங்கிய கீர்த்தி ரத்நாயக்க என்பவர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாவும் அமைச்சர் கூறினார். குறித்த நபர் விமானப் படையின் முன்னாள் உறுப்பினர் எனவும் விசேட குழுவொன்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாவது செயலாளரான  பெண் அதிகாரிக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார். இது தொடர்பாக கிடைத்த தகவலுக்கு அமைய, அவரது தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், அவர் வழங்கிய தகவல் தொடர்பில் ஆராய்வதாகவும் சரத் வீரசேக கூறினார். விமானப் படையின் முன்னாள் உறுப்பினர் என்பதால், அந்நபருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக தௌிவு இருக்க வேண்டும். எனினும், அத்தகைய தகவல் கிடைத்திருந்தால், அவர் அதனை பொலிஸாருக்கோ இராணுவத்திற்கோ அறிவித்திருக்க வேண்டும் என அமைச்சர் தௌிவுபடுத்தினார். மேலும், இந்தியா திருப்தியடையும் வகையில் விசாரணைகள் இடம்பெறும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார். கண்டி - ஹிந்தகல பகுதியை சேர்ந்த சந்தேகநபர் லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் எழுத்தாளராகவும் செயற்பட்டு வருகிறார். கீர்த்தி ரத்நாயக்க என்ற  நபர் விமானப் படையின் புலனாய்வு அதிகாரி அல்லவென விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார். 1997 ஆம் அண்டு விமானப் படையினர் நிர்வாகக் கிளையில் இணைந்த அவர், 2004 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். கட்டுநாயக்க விமானப் படை முகாமின் நிதி தவறாக கையாளப்பட்ட சம்பவமே இதற்கு காரணமாகும்.