50% கட்டில்கள் கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்கீடு

வைத்தியசாலை கட்டில்களில் 50% கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

by Staff Writer 14-08-2021 | 2:33 PM
Colombo (News 1st) அனைத்து வைத்தியசாலைகளிலும் தற்போது காணப்படும் கட்டில்களின் அளவில் 50 வீதத்தை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் தலைமையில் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார பணியாளர்கள் இயலுமானவரை தனிப்பட்ட ரீதியில் கொரோனா நோயாளர்களை கண்டறிந்து, தகவல்களை உறுதி செய்து, சிகிச்சை வழங்குவதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியில் ஒரு மத்திய நிலையத்தை ஸ்தாபித்து, அனைத்து கொரோனா நோயாளர்களையும் சோதனைக்குட்படுத்தியதன் பின்னர், தொற்றாளர்களை அனுப்பி வைக்கக்கூடிய சிகிச்சை நிலையங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்கான திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்தும் நேற்றைய கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோயாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கும் அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு அழைத்து செல்வதற்கும் அம்பியூலன்ஸ் வண்டிகள் போதுமானதாக இல்லை என்பதால், கொரோனா நோயாளர்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு போதுமானளவு அம்பியூலன்ஸ் வண்டிகளை ஈடுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடலின் போது யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, மாதாந்த சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு செல்லும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு Antigen பரிசோதனை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 60 வயதிற்கு மேற்பட்டோர் அபாய நிலையில் உள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு விரைவாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான அனைத்து செயற்பாடுகளையும் அமுல்படுத்தி வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், கிராமங்களுக்குள் மக்கள் தேவையற்ற விதத்தில் நடமாடுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கிராமங்கள் அல்லது நகரங்களை அண்மித்த பகுதிகளில் பெருமளவான நோயாளர்கள் அடையாளம் காணப்படும் போது இவ்வாறான விடயங்கள் தெரிய வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார். இதனால் உயிரை பாதுகாப்பதற்கு, தற்போதைய அபாயமான நிலையை கருத்திற்கொண்டு பொறுப்புணர்வுடன் அனைவரும் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.