கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு வைத்திய நிபுணர்கள் கோரிக்கை

by Staff Writer 13-08-2021 | 8:52 PM
Colombo (News 1st) குறுகிய காலத்திற்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி, மாகாணங்களுக்குள் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளை தலைமையில் அண்மையில் நடைபெற்ற சுயாதீன நிபுணர்கள் குழு கூட்டத்தில், இலங்கையின் COVID பரவல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்தாமல், தற்போதுள்ள நடைமுறையினை தொடர்ந்தால், அடுத்த மாதமளவில் நாளாந்தம் ஆறாயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகக்கூடும் என இந்த சுயாதீன வைத்திய நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது. கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாவிட்டால், அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் நாட்டின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை சுமார் 30,000 ஆக பதிவாகக்கூடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி, விசேட வைத்திய நிபுணர் பாலித அபேகோன், பேராசிரியர் மலிக் பீரிஸ், பேராசிரியர் நீலிகா மலவிகே, சமூக வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க உள்ளிட்ட தேசிய ரீதியிலான 16 நிபுணர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இதனிடையே, இலங்கை மருத்துவ சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி, அத்தியாவசிய சேவை மற்றும் தடுப்பூசியேற்றல் நடவடிக்கையை தடையின்றி முன்​னெடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.