by Staff Writer 12-08-2021 | 7:10 PM
Colombo (News 1st) யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழா கொடியேற்றத்திற்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று (12) காலை நடைபெற்றது.
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலய கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.
யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல்மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை மாட்டுவண்டியில், பருத்தித்துறை வீதி ஊடாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
ஆலயத்தின் வெளி வீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
அகிலம் போற்றும் அலங்காரக் கந்தனின் பெருந்திருவிழா நாளை (13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.