அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களுக்கு மஸ்கெலியா, புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளில் அஞ்சலி

by Staff Writer 12-08-2021 | 10:30 PM
Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் மறைந்த தலைவர் அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களுக்கு புதுக்குடியிருப்பு மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளில் இன்று (12) அஞ்சலி செலுத்தப்பட்டது. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இன்றைய அமர்வின் போது கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் மறைந்த தலைவர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களுக்கு இரங்கல் பிரேரணை கொண்டுவரப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் மு. முகுந்தகஜன் இந்த பிரேரணையை கொண்டுவந்ததுடன் அதனை சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றனர். அதனைத் தொடர்ந்து அன்னாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் உரையாற்றப்பட்டது. இதேவேளை, கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் மறைந்த தலைவர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களுக்கு மஸ்கெலியா பிரதேச சபையில் இன்று பகல் அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்விற்கான பிரேரணையை சபையின் உறுப்பினர் கெ. சுரேஷ்குமார் முன்வைத்தார். தவிசாளர் ஜி. செண்பகவள்ளி உட்பட சபை உறுப்பினர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.