இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி திட்டம் 

இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி திட்டம் நாளை (12) ஆரம்பம்

by Staff Writer 11-08-2021 | 7:29 PM
Colombo (News 1st) நாட்டின் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்தை இராணுவம் வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்கின்றது. அதற்கமைய, முதியவர்கள், நோய் பாதிப்புகளுக்கு ஆளானவர்கள், ஊனமுற்றவர்கள், பலவீனமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கலின் போது முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் COVID – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக, மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை நாளை (12) முதல் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்படுகின்றது. அதன்படி, ஆரம்பகட்டமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அவசியம் உடையவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்புகொண்டு பதிவுகளை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்காக 10 சிறப்பு நடமாடும் வாகனங்கள் தயார் நிலையில் காணப்படுவதுடன், இராணுவ நோய் தடுப்பு மற்றும் மனநல மருத்துவ பணிப்பகத்தை 1906 அல்லது 0112 860 002 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு முற்பதிவு செய்துகொண்ட பின்னர் தடுப்பூசிகள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.