பொது போக்குவரத்தை மட்டுப்படுத்த தீர்மானம்

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரமே மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து

by Staff Writer 11-08-2021 | 4:54 PM
Colombo (News 1st) மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மீண்டும் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவையில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மாத்திரம் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார். அதற்கமைய, ரயிலில் பயணிப்பதற்கு எதிர்பார்த்துள்ள பிற மாகாண பயணிகள், தமது அடையாள அட்டையை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு காண்பிப்பது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பொலிஸாருடன் இணைந்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாத்திரம் பயணிப்பதற்கான வசதிகளை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மாகாண எல்லைப் பகுதிகளில் பொலிஸாரினால் பஸ்களில் சோதனை செய்யப்பட்டு, அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக செல்பவர்களை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச். பண்டுக்க ஸ்வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார். தற்போது நாளாந்தம் 130 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மாகாணங்களுக்கிடையில் 1500 இற்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன.