வைத்தியசாலைகளில் நெரிசல் குறைந்து வருகிறது

வைத்தியசாலைகளில் நெரிசல் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

by Staff Writer 07-08-2021 | 2:24 PM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்ட நெரிசல் தற்போது படிப்படியாக குறைவடைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வீடுகளில் சிகிச்சையளிக்கும் முறைமை, அவசர நிலைமைகளின் போது வைத்தியசாலை அதிகாரிகள் விரைந்து செயலாற்றுகின்றமை உள்ளிட்ட காரணங்களால் வைத்தியசாலைகளில் நெரிசல் குறைவடைந்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அவசர நிலை நிலவிய காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் கொரோனா நோயாளர்களின் நெரிசல் குறைவடைந்துள்ளது. 210 கட்டில்களைக் கொண்ட விடுதிகளில் தற்போது 160 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார். கண்டி ​தேசிய வைத்தியசாலையில் 300 கட்டில்களைக் கொண்ட விடுதியில் 188 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெல்தெனிய வைத்தியசாலையில் 160 கட்டில்களிலும் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். களுபோவில வைத்தியசாலையில் 240 கட்டில்கள் காணப்படுவதுடன், 230 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரத்தினபுரி வைத்தியசாலையில் 5 நோயாளர் விடுதிகளிலும்100 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தகனம் செய்யும் இடங்களில் ஏற்படக்கூடிய நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து பிரிவுகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.