மலையக சிறுவர்களை பாதுகாக்க வேண்டும்

மலையக சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்பை கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Bella Dalima 06-08-2021 | 10:35 AM
Colombo (News 1st) சிறுவர் தொழிலாளர்களாக அதிகளவில் ஈடுபடுத்தப்படும் மலையக சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்பை கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய, வீட்டில் அவர்களது பிள்ளைகள் இல்லை என்ற தகவல் கிடைத்தால், கிராம உத்தியோகத்தர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கும் குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உயிரிழந்த சிறுமியின் இரண்டு சகோதரிகளுக்கு சுயதொழில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கூறியுள்ளார். பாடசாலை இடைவிலகல்களுக்கு காரணத்தைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் முக்கிய பொறுப்பென ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.