பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட நால்வருக்கு COVID தொற்று

by Staff Writer 06-08-2021 | 8:53 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட நால்வருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஜானக்க திஸ்ஸ குட்டிஆரச்சி, ரோஹன திசாநாயக்க மற்றும் திலீப் வெதஆரச்சி ஆகியோருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோஹன திசாநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டதுடன், திலீப் வெதஆரச்சி கடந்த மூன்று நாட்களாக பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு வந்திருந்ததாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் குறிப்பிட்டுள்ளார். அவர் சந்தித்தவர்களை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் படைக்கல சேவிதர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சைக்காக அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள COVID சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இதனிடையே, சில தினங்களுக்கு முன்னர் மரண சடங்கொன்றில் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்தமையால், தாம் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.