by Bella Dalima 05-08-2021 | 4:02 PM
Colombo (News 1st) அறிகுறிகள் இன்றி அபாய நிலையில் இல்லாத COVID தொற்றாளர்களை வீட்டிலே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
இதேவேளை, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அபாய நிலை தொடர்பான எழுத்து மூல அறிவிப்பு கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அநேகமான பிரதான வைத்தியசாலைகளில் அபாய நிலையே காணப்படுவதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.
தற்போது காணப்படும் வசதிகளுக்கு மேலதிகமான COVID நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ஒக்சிஜன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், முன்னுரிமை தேவைக்கு அமைய அபாய நிலையை கருத்திற்கொண்டு நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் ஏனையவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய COVID நிலையை கருத்திற்கொள்ளாது, மாகாண எல்லைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சுட்டிக்காட்டினார்.