தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 313,769 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,13,769 ஆக அதிகரிப்பு

by Staff Writer 03-08-2021 | 10:22 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,13,769 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (02) புதிததாக 2, 382 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதேவேளை, நாட்டில் மேலும் 63 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டவையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 36 ஆண்களும் 27 பெண்களும் அடங்குகின்றனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,571 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 2,80,868 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் இன்றும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. விரும்பும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றமை எந்த விதத்திலும் பயனற்றது என மருந்து விநியோகம், உற்பத்தி மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டினார். எனவே, அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையத்திற்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார். டெல்டா பிறழ்வு தொற்றினால் அனைவரும் ஆபத்தான நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.