சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

by Staff Writer 01-08-2021 | 9:02 PM
Colombo (News 1st) சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று (01) நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர் நிலக்சனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் சகாதேவன் நிலக்சனின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து நிலக்சனை நினைவுகூர்ந்தனர். யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடகக்கற்கை மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன், 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அதிகாலை 5 மணியளவில் ஆயுததாரிகள் நிலக்சனை வீட்டிற்கு வௌியே அழைத்து, அவரது பெற்றோர் முன்னிலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.