ஆபாச படங்களை பதிவேற்றியவர் அடையாளங்காணப்பட்டார்

சிறுவர்களின் ஆபாச படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

by Staff Writer 31-07-2021 | 3:15 PM
Colombo (News 1st) சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றிய ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ளார். கண்டியை சேர்ந்த ஒருவரால் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிழற்படங்களும் காணொளிகளும் பதிவேற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த நபர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தளங்களில் பகிர்வோரை கைது செய்வதற்கான விசேட தேடுதல் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய, சிறுவர் மற்றும் மகளிர் பணியகமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். சிறுவர்கள் தொடர்பான ஆபாச நிழற்படங்கள் அல்லது காணொளிகளை இணையதளங்களில் பதிவேற்றுவோர் மற்றும் தரவிறக்கம் செய்வோர் தொடர்பில் உடனுக்குடன் தகவல்களை பெறுவதற்கான பொறிமுறை செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதற்கமைய, சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துதல், அதற்காக சிறுவர்களை பயன்படுத்த ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.