அமரர் திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களை நினைவுகூர்ந்து நாட்டின் பல பகுதிகள் சமய நிகழ்வுகள்

by Staff Writer 31-07-2021 | 8:43 PM
Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் அமரர் திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களை நினைவுகூர்ந்து இன்று நாட்டின் பல பகுதிகளிலும் சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரதான தர்ம போதனை இன்று கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையத்தில் நடைபெறுகிறது. கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் மறைந்த தலைவர் அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி புலத்கொஹூபிட்டிய - எதுராபொல தோட்ட மக்கள் பூஜையொன்றை நடத்தினர். எதுராபொல தோட்டத்திலுள்ள ஶ்ரீ பத்தினி அம்பாள் ஆலயத்தில் இந்த ஆத்ம சாந்தி பூஜை நடத்தப்பட்டது. இதனை எதுராபொல தோட்ட பொதுமக்களுடன் இணைந்து ஶ்ரீ பத்தினி அம்பாள் ஆலய பரிபாலன சபையினர் நடத்தினர். அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அமரர் திரு ஆர். ராஜமகேந்திரன் அவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி இன்று பூஜை நடத்தப்பட்டது. அன்னாரின் உருவப்படத்திற்கு பூமாலை அணிவித்து புஷ்பாஞ்சலி மற்றும் சுட்டி விளக்கு ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. ஆலய குருக்கள் நீதி நாதன் அங்குச நாத குருக்கள் தலைமையில் பூஜை நடைபெற்றது. கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் சேவையை பாராட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வொன்று கிண்ணியா - மாஞ்சோலை பள்ளிவாசலில் இடம்பெற்றது. பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி ஏ.எஸ். பைசல் ரஹ்மி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் இதில் கலந்துகொண்டிருந்தனர். அமரர் திரு ஆர். ராஜமகேந்திரன் அவர்களை நினைவுகூர்ந்து இலங்கையை போன்று ஜப்பானிலும் சமய வழிபாடுகள் இடம்பெற்றன. இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர் பானகல உபதிஸ்ஸ தேரரின் தலைமையில் இந்த சமய நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் சஞ்சீவ குணசேகர உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர். மக்கள் சக்தி திட்டத்தின் முதற்கட்டத்தின் போது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட தம்புள்ளை சீகிரிமுல்ல அருணோதய கிராமத்தின் குடிநீர் திட்டத்திற்கு முன்பாக அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இன்று சமய வழிபாடுகள் இடம்பெற்றன. இதேவேளை, அமரர் திரு ஆர். ராஜமகேந்திரன் அவர்களை நினைவுகூர்ந்து ஹம்பாந்தோட்டை - அந்தரவெவ தர்மதூத விகாரையிலும் இன்று சமய வழிபாடுகள் இடம்பெற்றன.