நாளை (01) முதல் பொது போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்

நாளை (01) முதல் பொது போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2021 | 2:03 pm

Colombo (News 1st) மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நாளை (01) முதல் மீள ஆரம்பமாகவுள்ளன.

நாளை முதல் பொது போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் வசதி கருதி சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன.

இதனடிப்படையில், காலை மற்றும் மாலை வேளைகளில் பொது போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இடைப்பட்ட காலப்பகுதியில் 25 வீதமான போக்குவரத்து சேவைகளே முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொற்று பரவும் வேகம் மீண்டும் அதிகரிப்பதால், பொது போக்குவரத்தின் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எச்சரிக்கை மிக்க காலப்பகுதி என்பதால், தேவைப்படும் பட்சத்தில் மாத்திரம் பொது போக்குவரத்தினை பயன்படுத்துமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்