COVID தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களை கணக்கெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 30-07-2021 | 8:19 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் COVID தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். COVID ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று (30) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். COVID வைரஸினால் மரணித்தவர்களில் 95 வீதமானர்கள், தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக இந்த கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை கொண்டு வரும் செயற்பாட்டை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதுடன், நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்வது மக்களின் பொறுப்பு என ஜனாதிபதி கூறியுள்ளார். எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களுக்கு வரும் மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்குவது தொடர்பிலும் COVID குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.