பொறுப்பை நிறைவேற்றியதாக தசுன் ஷானக்க ​தெரிவிப்பு

பொறுப்பை நிறைவேற்றியதாக தசுன் ஷானக்க ​தெரிவிப்பு

by Staff Writer 30-07-2021 | 8:45 PM
Colombo (News 1st) அணித்தலைவர் என்ற ரீதியில் தனது பொறுப்பை நிறைவேற்றியதாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார். இந்தியாவிற்கு எதிராக முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் வெற்றியை ஈட்டிய பின்னர் அவர் இதனை கூறினார். இந்தியாவிற்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் இலங்கை அணி 07 விக்கெட்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான 03 போட்டிகள் கொண்ட T20 தொடர், கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை - இந்திய அணிகள் 1-1 என சமநிலை வகித்தன. இந்த நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்று (29) நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இந்திய அணி முதலில் இருந்தே தடுமாற்றம் அடைந்ததுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். கெய்க்வாட் (Gaikwad) 14 ஓட்டங்களை பெற்றார். அவரை அடுத்து களமிறங்கிய வீரர்கள், ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். 36 ஓட்டங்களுக்குள் 05 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்களை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 04 ஓவர்களில் 09 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து அதிரடியாக 04 விக்கெட்களை வீழ்த்தியதுடன் தசுன் ஷானக்க 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதற்கமைய, 82 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணியில், தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். மினோத் பானுக்க 18 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 14 ஓட்டங்களையும் பெற்றனர். 14.3 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்த இலங்கை அணி, இந்தியாவிற்கு எதிரான 03 போட்டிகள் கொண்ட T20 தொடரை கைப்பற்றியது. தொடரின் சிறந்த வீரராக வனிந்து ஹசரங்க தெரிவானார்.