நாவாந்துறையில் இளைஞரை தாக்கிய குற்றச்சாட்டில் 4 பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது

by Staff Writer 30-07-2021 | 3:09 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - குருநகர், நாவாந்துறை பகுதியில் இளைஞர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பெண்களும், ஆண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புறா வளர்ப்பு தொடர்பில் ஏற்பட்ட தகராறினால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த இளைஞர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதையடுத்து, அவ்விளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இளைஞரின் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். இதனையடுத்து, இளைஞரின் சடலம் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.