by Staff Writer 30-07-2021 | 6:13 PM
Colombo (News 1st) கொரோனா டெல்டா பிறழ்வு அடையாளங்காணப்பட்டதையடுத்து சீனாவின் நாஞ்சிங் (Nanjing) நகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
வுஹானில் கொரோனா தொற்று ஆரம்பமானதன் பின்னர் நாஞ்சிங் நகரில் டெல்டா பிறழ்வு முதற்தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிறழ்வு தலைநகர் பீஜிங் மற்றும் ஐந்து மாகாணங்களுக்கு பரவியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் அறிவித்துள்ளது.
டெல்டா பிறழ்வு மிக தீவிர தொற்றாக பரவி வருவதுடன், கடந்த சில மாதங்களில் மிக மோசமான கொரோனா வைரஸ் அவசர நிலை உருவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 நாட்களில் 170 பேர் டெல்டா பிறழ்வு தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
நாஞ்சிங் நகரில் இருந்து விமான சேவைகளும் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், நகருக்கு வருகை தருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் வீடுகளிலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, 9.3 மில்லியன் சனத்தொகை கொண்ட நாஞ்சிங் நகரில் இரண்டாவது பாரிய கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நகரில் வசிப்பவர்கள் வீடுகளில் இருந்து வௌியேற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுப்போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.