ஒ​ரே நாளில் 5,15,830 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது; நாளை AstraZeneca வருகிறது

by Bella Dalima 30-07-2021 | 2:18 PM
Colombo (News 1st) நாட்டில் ஒ​ரே நாளில் அதிகூடிய தடுப்பூசி நேற்று (29) ஏற்றப்பட்டதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று மாத்திரம் 5,15,830 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 87,18,433 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 19,94,384 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. இதேவேளை, வட மாகாணம் உள்ளிட்ட நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்றும் தடுப்பூசி ஏற்றப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே, தட்டுப்பாடாக காணப்படும் 7 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகள் நாளை (31) கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனிடையே, நாட்டில் மேலும் 66 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் (28) உறுதிப்படுத்தப்பட்டவையென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் 30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 17 பேரும் 60 வயதிற்கு மேற்பட்ட 49 பேரும் அடங்குகின்றனர். இதேவேளை, 2,329 COVID நோயாளர்கள் நேற்று அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,04,202 ஆக அதிகரித்துள்ளது. 1641 COVID நோயாளர்கள் நேற்று குணமடைந்தனர். இதன்படி, 2,73,496 COVID நோயாளர்கள் இதுவரை குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளாகிய 26,448 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.