by Staff Writer 29-07-2021 | 11:16 AM
Colombo (News 1st) தேர்தல்கள் மற்றும் தேர்தல் கட்டமைப்பு தொடர்பில் பொருத்தமான சீர்த்திருத்தங்களை அடையாளம் காணப்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுவிற்கு கிடைத்துள்ள யோசனைகளை ஆராய்வதற்காக ஐவரடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர், அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே தலைமையில் குறித்த ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி அனுர கருணாத்திலக்க, சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, பேராசிரியர் பி. பாலசுந்தரம் பிள்ளை மற்றும் பாலச்சந்திரன் கௌதமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் விசேட தெரிவுக்குழு நேற்று கூடிய போதே, விசேட நிபுணர் குழுவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்த்திருத்தங்கள் தொடர்பில், 21 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், 155 சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களினால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.