தேர்தல் மறுசீரமைப்பு பகுப்பாய்வு குழு நியமனங்கள்

தேர்தல் முறைமை மறுசீரமைப்பு: பகுப்பாய்வு குழு தலைவராக சுதந்த லியனகே நியமனம்

by Staff Writer 28-07-2021 | 5:37 PM
Colombo (News 1st) தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்பிற்கான முன்மொழிவுகளை பகுப்பாய்வு செய்யும் நிபுணர் குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி அனுர கருணாதிலக்க, சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, பேராசிரியர் பி. பாலசுந்தரம்பிள்ளை மற்றும் பாலச்சந்திரன் கௌதமன் ஆகியோர் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று (28) நடைபெற்ற பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூட்டத்தின் போது, சபை முதல்வர் தினேஸ் குணவர்தன இதனை அறிவித்துள்ளார். தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்பிற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவிற்கு, 21 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் 155 சிவில் அமைப்புகளிடமிருந்து முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக, தெரிவுக்குழுவின் செயலாளர் , பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர குறிப்பிட்டுள்ளார். தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்த்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமான விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு கடந்த ஏப்ரல் மாதம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்டது.