இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்தது

by Staff Writer 28-07-2021 | 7:47 PM
Colombo (News 1st) இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்ட 1,380 நோயாளர்களுடன் நாட்டில் இதுவரை 3,01,272 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து இன்று 1499 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனிடையே, வட மாகாணத்தில் இன்றும் COVID தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில் மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர். கிளிநொச்சி மத்திய கல்லூரி,​ அக்கராயன் மகா வித்தியாலயம், வட்டக்கச்சி மத்திய கல்லூரி, உருத்திரபுரம் வைத்தியசாலை, தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் வைத்தியசாலை, பூநகரி வைத்தியசாலை உள்ளிட்ட பகுதிகளில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு COVID தடுப்பூசி ஏற்றப்பட்டது. வவுனியா - பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலய மண்டபத்தில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் ஆசிரியர்களுக்கும் COVID தடுப்பூசி ஏற்றப்பட்டது.